எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் தவெக மனு மீது உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று பிற்பகல் விசாரணை நடைபெறுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு தற்போது தசரா விடுமுறை என்பதால், விடுமுறைக்கால நீதிபதியான தண்டபாணியை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக வழக்கறிஞர் அணியினர் நேற்று சந்தித்தனர்.
அப்போது, கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட சம்பவம் விபத்துபோல தெரியவில்லை என்றும் திட்டமிட்ட சதிபோலவே தெரிவதாகவும் அவர்கள் முறையிட்டனர். பிரசாரம் நடந்து கொண்டு இருந்த போது, திடீரென எங்கிருந்தோ கற்கள் வீசப்பட்டது என்றும் போலீசார் தடியடி நடத்தியதாகவும் நீதிபதியிடம் தெரிவித்த தவெகவினர், இதுதொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும், நடந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டனர்.
இதை கேட்ட நீதிபதி தண்டபாணி, சம்பவம் நடந்த இடமான கரூர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எல்லைக்குள் இருப்பதால் இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தவெகவினர் தாக்கல் செய்த மனு மீது திங்களன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறும் என்றும் கூறினார். அதனடிப்படையில் தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று காலை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தசரா விடுமுறைக் கால சிறப்பு அமர்வில் மனு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.