எழுத்தின் அளவு: அ+ அ- அ
வால்பாறை அடுத்த பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே வனப்பகுதிக்குள் சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமியின் உடல் 12 மணி நேர தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் தென்பிரிவில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்- மொனிகா தம்பதியினர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அவர்களது 7 வயது மகள் ரோசினிகுமாரி வீட்டின் அருகே விளையாட்டிக் கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த சிறுத்தை ஒன்று, தாயின் கண்முன்னே, சிறுமியை கவ்வி சென்றது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் நேற்று இரவு முழுவதும் வனப்பகுதியில் நீண்ட நேரம் தேடினர். இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் சுணக்கம் ஏறப்பட்டது. இதனிடையே சிறுமியின் ஆடை மட்டும் கிடைத்ததால், சிறுமிக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற அச்சத்தில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. சுமார் 150க்கும் மேற்பட்டோர் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், 12 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமியின் உடல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டது.