கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அரசால், அவசர கதியில் வீண் விளம்பரத்திற்காக திறக்‍கப்பட்ட கிளாம்பாக்‍கம் பேருந்து நிலையத்தில், பொதுமக்‍கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையில் துன்பப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். மக்‍கள்படும் துன்பங்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்‍காமல் சுயநலப்போக்‍கோடு செயல்படும் திமுக விளம்பர அரசுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், திமுக தலைமையிலான அரசால் திரு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, அவசர கதியில் வீண் விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையில் துன்பப்படுவது மிகவும் வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். நள்ளிரவு, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர் - மக்கள் படும் துன்பங்களைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் சுயநலப்போக்கோடு செயல்படும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னைக்கு வெளியே அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்த போதும், போதிய பேருந்துகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் -

பொதுமக்கள் பல்வேறு பணி நிமித்தமாக சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பேருந்துகள் இல்லாமல் நேற்று இரவு பல மணிநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது - அதாவது, வருகின்ற பேருந்துகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் என்று கூறியதால், அதில் ஏற முடியாமல் சாதாரண பேருந்துகளை எதிர்பார்த்து பல மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது - திமுக தலைமையிலான அரசு விடுமுறை காலங்களில் கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்புகளை மட்டுமே கொடுக்கிறது - ஆனால், உண்மை நிலை என்னவென்றால், போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் பேருந்து நிலையத்திலேயே விடிய விடிய காத்திருக்க வேண்டிய கொடுமைக்கு ஆளாகவேண்டியுள்ளது - அதாவது, பல மணி நேரமாக பேருந்துகள் கிடைக்காமல் காத்திருந்து விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பயணிகள் நள்ளிரவு 2 மணியளவில் அங்கு வந்த பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் - மேலும்,பயணிகள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் வேதனை அளிக்கிறது என, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளால், அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதால், தமிழக மக்களின் பாதுகாப்பே இன்றைக்கு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது - திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் படிக்கட்டு இல்லா அரசு பேருந்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திகில் பயணம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக,சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தபோது, திடீரென இருக்கையின் கீழே இருந்த பலகை உடைந்து அதன் வழியே கீழே விழுந்துள்ளார் - பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் உயிர் பிழைத்து இருக்கிறார் - திமுக தலைமையிலான ஆட்சியில் அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளை கல்லூரியின் முதல்வரே, திமுக நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது வன்மையாக கண்டிக்கதக்கது - அதிலும், மாணவ, மாணவியர்களை அழைத்து செல்வதற்காக, மாநகர போக்குவரத்துக் கழக அரசு பேருந்துகளையே பயன்படுத்துவது திமுகவினரின் அராஜகத்தை காட்டுகிறது - இதுபோன்று, அரசு பேருந்துகளை இன்றைக்கு திமுகவினர் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி விடுவதால்தான்  பொதுமக்கள் போதிய பேருந்துகள் இன்றி சாலையில் அமர்ந்து போராடவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - இதற்கெல்லாம் தமிழக மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, திமுகவினர் திராவிட மாடல் என்று சொல்லி திராவிடத்தை இழிவு படுத்துவதை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டும் - மேலும், பொதுமக்களுக்கு அனைத்து நாட்களிலும் போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day