"ஆள விடுங்கடா சாமி" கோஷ்டி மோதலால் ஓட்டம்பிடித்த திமுக வேட்பாளர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

வடசென்னை திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அந்த கட்சியின் இரண்டு கோஷ்டியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோஷ்டி பூசலை சமாளிக்க முடியாமல் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு திமுக வேட்பாளர் ஓட்டம் பிடித்த சமப்வம் குறித்து சற்று விரிவாக காணலாம்...

திமுகவும், உட்கட்சி பூசலும் பிரிக்க முடியாது ஒன்று என்றே கூறலாம்.. அந்த அளவுக்கு அக்கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அரங்கேறியுள்ளது வடசென்னை திமுக கோஷ்டி மோதல்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். தாழாங்குப்பம் பகுதியில் வாக்கு சேகரித்த அவருடன் மாவட்ட செயலாளர் சுதர்சனம், எம்எல்ஏ சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். திருவொற்றியூர் 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது,  திமுக கவுன்சிலரான சிவக்குமார் அவர்களது பிரச்சார வாகனத்தில் ஏறி மாலை போட முயன்றார். அப்போது அங்கிருந்த திமுகவின் மற்றொரு கோஷ்டியினர் சிவக்குமாரை கீழே இறங்குமாறு கோஷமிட்டனர். மேலும், கடந்த முறை வெற்றி பெற்ற பின் சிவக்குமார் இந்த பகுதிக்கு எதுவும் செய்யவில்லை எனவும், எனவே அவரை அழைத்து வரவேண்டாம் எனவும் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாக்கு சேரிக்க வந்த இடத்தில் இப்படி ஒரு பிரச்சனையா என திணறிப்போன, திமுக எம்.எல்.ஏ, சங்கர், எதுவாக இருந்தாலும் ஊர் கோவிலில் அமர்ந்து பேசிக்கொள்ளலாம் என கூறி ஒருவழியாக சமாளித்தார்.

தொடர்ந்து அனைவரும் தாழங்குப்பம் பகுதியில் உள்ள கோவிலில் அமர்ந்து பேசிய நிலையில், கவுன்சிலர் சிவக்குமார் மீது எதிர் கோஷ்டியினர் அடுக்கடுக்கான புகார்களை வைத்தனர். வெற்றி பெற்றதில் இருந்து எந்த நன்மையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டினர். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பதாக வழக்கம் போல் பொய்யான வாக்குறுதியை கொடுத்து அவர்களை அப்போதைக்கு வீராசாமி கலாநிதி சரிகட்டிவிட்டு மீண்டும் பிரச்சாரத்தை துவங்கினார்....

பிரச்சனை இதோடு முடிந்தது என நினைத்து பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், கவுன்சிலர் சிவக்குமாரின் உறவினர்கள் மற்றும் எதிர் கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

மேலும், பிரசார வாகனத்தில் இருந்த எம்எல்ஏ சங்கருக்கும், கவுன்சிலர் சிவகுமாருக்கும் இடையே  மாவட்ட செயலாளர் சுதர்சனம் முன்பாகவே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் தாக்கிக் கொள்ள முயன்றதால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட செயலாளர் சுதர்சனம், இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கடும் வாக்குவாதத்திலேயே ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, ஆள விடுங்கடா சாமி.. என பதறி அடித்துக் கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி தனது காரில் ஏறி சிட்டாய் பறந்தார்.

இதனையடுத்து அங்கிருந்த போலீசார், சிவக்குமார் தரப்பினரை அந்த இடத்தைவிட்டு, பாதுகாப்பாக அழைத்து செல்ல, எதிர்ப்பு கோஷ்டியினர் பின்தொடர்ந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கவுன்சிலர் தங்கள் பகுதிக்கு வர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், திமுகவினரின் கோஷ்டி பூசலாலும், பிரச்சாரம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் என அனைத்து தரப்பினரும் அவசர அவசரமாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

திமுகவினர் வாக்கு சேகரிப்பிற்கு செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது நாம் அறிந்ததே. ஆனால், எம்எல்ஏ, எம்.பி, மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவினரை ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது திமுக தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day