திருப்புவனம் காவல்நிலையத்தில் நீதிபதி விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக 4வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், அஜித்குமாரை அழைத்து சென்ற காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணையை நடத்தினார்.

அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக விரிவாக விசாரித்து அறிக்கை வழங்க மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதன் பேரில், கடந்த 2ம் தேதி திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து தனது விசாரணையை தொடங்கினார். ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் அறநிலையத்துறை அலுவலர் பெரியசாமி, தனிப்படையினர் அஜித்தை தாக்கிய சம்பவத்தை வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், கோயில் அலுவலர் பிரபு, கோவில் உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக், அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் அஜித்குமாரின் சகோதரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். 

3வது நாள் விசாரணையில் திருப்புவனம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன், அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் சதாசிவம் மற்றும் ஏஞ்சல் ஆகியோரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை நடத்தினார்.

இதனிடையே, 4வது நாள் விசாரணையை தொடங்கி உள்ள நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், அஜித்குமாரை விசாரணைக்காக திருப்புவனம் காவல்நிலையத்தில் அழைத்து வந்த போது இருந்த காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், அஜித்குமார் அமர வைக்கப்பட்ட இடம் ஆகிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமாரை விசாரணை நடத்திய பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா DVR ஐ அனுமதியின்றி எடுத்து சென்ற சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. டிஎஸ்பி சுந்தரம், ஏடிஎஸ்பி சுகுமாறன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் போது அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சாட்சியங்களிடம் பெறப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் காவல்துறையினரிடம் பெறப்பட்ட கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை மரப்பெட்டியில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day