எழுத்தின் அளவு: அ+ அ- அ
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரானின் பதிலடி தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆபரேசன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் வெள்ளிக் கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியது. டெஹ்ரானில் உள்ள அணுசக்தி அமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி ஈரான் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து, 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' என்ற பெயரில், 250க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. ஈரானின் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரான் நடத்திய தாக்குதலை இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தியது. ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஈரான் அணுசக்தி அமைப்புகள் மீதான இந்த தாக்குதல் ஆரம்பம் மட்டுமே என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரான் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளதாக அவர் எச்சரித்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.