எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்றுவரும் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். இதற்காக இன்று காலை 11 மணிக்கு கண்ணூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறியும் பிரதமர் மோடி, நண்பகல் 12.15 மணிக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும், நிலச் சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். அதன் பிறகு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில், நிலச்சரிவு மற்றும் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் விரிவாக விளக்கப்படவுள்ளது.