எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய ராணுவம் நடத்திய ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில், தனது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பஹாவல்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அசாரின், குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் அசாரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் அடங்குவர் என்று ஜெய்ஷ் இ முகமது தலைவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மசூத் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், இரண்டு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹாவல்பூர் மற்றும் முரிட்கேவில் தலா 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மற்ற இடங்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த தாக்குதலில் 80 தீவிரவாதிகள் வரை அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.