எழுத்தின் அளவு: அ+ அ- அ
கன்னட மொழி குறித்து தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், கன்னட மொழியை சிறுமை படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடக வர்த்தக சபைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிவராஜ்குமார் மீதான உண்மையான பாசத்துடன், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற நோக்கத்திலேயே தான் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மக்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்திருக்கும் அன்பின் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என தெரிவித்துள்ள கமல்ஹாசன்,
தமிழ், கன்னடம், தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்த மண்ணின் அனைத்து மொழிகளுடன் தனக்கு உறுதியான பிணைப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், ஒரு மொழி மீது மற்றொரு மொழி ஆதிக்கத்தை செலுத்துவதற்கு தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சினிமா என்பது மக்களிடையே ஒரு பாலமாக இருக்க வேண்டுமே தவிர பிரிக்கும் சுவராக இருக்கக் கூடாது என்பதுதான் தன்னுடைய நோக்கம் எனவும் கமல்ஹாசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.