எழுத்தின் அளவு: அ+ அ- அ
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், ஆந்திரா - ஒடிசா கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆந்திரா, தெலங்கானா, மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒடிசாவிற்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், மகாராஷ்டிராவிற்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.