செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள மாலோலன் கலை அறிவியல் கல்லூரியில், ராமாபுரம், மோகல்வாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். வழக்கம்போல் தனியார் பேருந்தில் இன்று மாணவர்கள் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது, சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தை கண்டெய்னர் லாரி ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது, பேருந்தை உரசியபடி சென்றுள்ளது. இதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மோனிஷ், கமலேஷ் உள்ளிட்ட 4 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.