எழுத்தின் அளவு: அ+ அ- அ
கேரள மாநிலம் கொச்சி அருகே நடுக்கடலில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து உதவிக்காக கடற்படை அங்கு விரைந்துள்ளது.
270 மீட்டர் நீளமுள்ள எம்.வி.வான் ஹாய் என்ற சரக்குக் கப்பல் கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்டு மும்பை சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 22 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர்.
கொச்சிக்கு அருகிலுள்ள பேப்பூரில் இருந்து 78 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, கப்பலில் ஒரு பெரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து கரும்புகை எழுந்துள்ளது. இது குறித்த தகவலை மும்பையில் உள்ள கடல்கார் செயல்பாட்டு மையம், கொச்சி துறைமுக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் கப்பலும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐஎன்எஸ் கருடாவில் இருந்து ஒரு டோர்னியர் விமானமும் சம்பவம் நடந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கப்பலின் அடித்தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நான்கு மாலுமிகள் காணாமல் போயுள்ளனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் பெரிய தேடுதல் மற்றும் மீட்பு அவசர நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதற்காக மங்களூரிலிருந்து ஐசிஜிஎஸ் ராஜ்தூத், கொச்சியிலிருந்து ஐசிஜிஎஸ் அர்ன்வேஷ் மற்றும் லட்சத்தீவின் அகட்டியில் இருந்து ஐசிஜிஎஸ் சச்செத் கப்பல்கள் அங்கு விரைந்துள்ளன.