தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி  ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் 2-வது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளனர்.
 
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கரூரில் முகாமிட்டு, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.

வழக்கின் விசாரணைக்காக தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர்  டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.  சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நீடித்தது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில்  தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் 2வது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளனர். அதேபோல் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்பி ஜோஷ் தங்கையா மற்றும் காவல்துறை அதிகாரிகளும் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரி சுனில்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day