டிஜிபி நியமன குளறுபடியால் கரூர் அசம்பாவிதம் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் டிஜிபி நியமனத்தில் இருந்துவரும் நடைமுறைகளை விளம்பர திமுக அரசு முறையாக கடைபிடிக்கவில்லை என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கரூர் அசம்பாவிதம் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு இதுவும் மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா,  தமிழக காவல்துறை கரூர் சம்பவத்தில் சரியாக செயல்பட்டு இருந்தால் 41 அப்பாவி உயிர்கள் பறிபோயிருக்காது என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் டி.ஜி.பி.யாக இருந்த திரு. சங்கர் ஜிவால், கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தமிழக காவல்துறையின் நிர்வாக டி.ஜி.பி.யாக இருக்கும் திரு. வெங்கடராமன், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுகிறார் -எனவே, பொறுப்பு டி.ஜி.பியின் தலைமையில்தான் ஒரு மாத காலமாக தமிழக காவல்துறை இருந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு டி.ஜி.பி. ஓய்வு பெறுவது மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரியும் - அதற்கு முன்பாகவே டி.ஜி.பி பதவிக்கு பணி மூப்பு அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் பதவியை ஏற்றுக்கொள்வதுதான் இதுநாள் வரை நடைமுறையாக இருந்துள்ளது - ஆனால், திமுக தலைமையிலான அரசோ இந்த நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

அதாவது திரு.சங்கர் ஜிவால், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஓய்வு பெறும் நிலையில் மே 31ஆம் தேதிக்கு முன்பாக தமிழக காவல்துறையின் பணி மூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, அதனை UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்து, அதன் பரிந்துரைப்படி ஒருவர் டி.ஜி.பியாக செப்டம்பர் 1ஆம் தேதியன்று பதவி ஏற்று இருக்கவேண்டும் - ஆனால், தமிழக காவல்துறையின் பணி மூப்பு பட்டியலில் 8ஆவது நபராக இருக்கும் திரு.வெங்கடராமன்தான் இன்று வரை தமிழக காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக செயல்பட்டு வருகிறார் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி பணிமூப்பு அடிப்படையில் UPSC-க்கு பட்டியல் அனுப்பப்படவேண்டும் - அப்பட்டியலில் இருந்து மூன்று நபர்கள் கொண்ட தேர்வு பட்டியல் மாநில அரசுக்கு UPSCஆல் அனுப்பப்படும் - அவ்வாறு அனுப்பப்படும் பட்டியலில் இருந்து ஒருவர் டி.ஜி.பி-ஆக நியமிக்கப்படுவர் - ஆனால் திமுக தலைமையிலான அரசு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களையும் புறம்தள்ளிவிட்டு பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்து ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும் என புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவினை திமுக தலைமையிலான அரசு மீறி உள்ளதாக குற்றம் சாட்டி, சமூக ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகுதான், இந்த அரசு டி.ஜி.பி தேர்வுக்கான பட்டியலை தயார் செய்து UPSCக்கு அனுப்பியுள்ளது - எனவே, இனி UPSCயில் இருந்து தேர்வு பட்டியல் வந்தவுடன்தான் டி.ஜி.பி நியமனம் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது - இவற்றையெல்லாம் திமுக தலைமையிலான அரசு கடந்த மே மாதத்திலேயே செய்திருக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கரூர் அசம்பாவிதம் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு இதுவும் மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது - தமிழக காவல்துறை கட்சி பேதமின்றி யாருக்கும் சார்பில்லாமல் மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தன்னிச்சையான முடிவுகளை எடுத்தால்தான் மக்களை பாதுகாக்க முடியும் - தமிழக காவல்துறை கரூர் சம்பவத்தில் சரியாக செயல்பட்டு இருந்தால் 41 அப்பாவி உயிர்கள் பறிபோயிருக்காது என புரட்சித்தாய் சின்னம்மா வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகளில் ஒரு பொறுப்பு டி.ஜி.பியாக இருப்பவர் எவ்வாறு உறுதியான முடிவுகளை எடுக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது - தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வரோ இதுபோன்ற அத்தியாவசியமான விசயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு கட்சியை பலப்படுத்துவதிலும், தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், தமிழக மக்கள் வரிப்பணத்தை செலவழித்து தனது சொந்த கட்சியினர் பெயரில் பாலம் திறப்பதிலும் முழு நேரத்தையும் செலவிட்டு கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார். 

புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் காவல்துறை மிகவும் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட்டது - தனது சொந்த கட்சியினர் உள்பட யாராக இருந்தாலும் காவல் நிலையத்திற்குள் சென்று காவலர்களை கட்டுப்படுத்த முடியாது - அதேபோன்று அரசு அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டனர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், இன்றோ எல்லாம் தலைகீழாக உள்ளது - தமிழக காவல்துறை தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது 33 அமைச்சர்கள் உட்பட திமுகவினரின் முழுகட்டுப்பாட்டில் இருக்கிறதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெறும் பல விதமான சட்டமீறல்களும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவலநிலையும் இதற்கு சாட்சியாக விளங்குகின்றன - சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து இன்றைக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது - பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகி, இளம் வயதினரை மிக மோசமாக சீரழித்து கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டியுள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே ஒரே தீர்வு என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

Night
Day