எழுத்தின் அளவு: அ+ அ- அ
டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு ஆவணங்களை பார்க்கும் போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிவதாகவும், டாஸ்மாக் நிர்வாகம் தனது தவறுகளை உணர வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் விற்பனையாளர்களான மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மார்க் நிறுவனத்தில் நடைபெற்று வரும் மாமூல் வசூல் குறித்து புகார் அளித்திருந்ததாகவும், இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்ததாகவும் கூறியிருந்தனர். இதற்காக தங்களை பணியிடை நீக்கம் செய்த டாஸ்மாக் மேலாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட டாஸ்மார்க் மேலாளராக பணியில் இருந்த ராஜேஸ்வரியும் திருமங்கலம் டாஸ்மார்க் மேற்பார்வையாளராக இருந்த செல்வமும் இணைந்து ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தினமும் 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததாகவும், இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஊழல் குற்றச்சாட்டில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும் போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது, டாஸ்மார்க் துறை தன் தவறுகளை உணர வேண்டும் என்றும் கூறினார். மேலும் டாஸ்மாக் முறைகேடு குறித்து ஊடங்களுக்கு பேட்டியளித்த ஊழியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தும் உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.