எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் 2024 ஜுன் வரை நிலுவையில் உள்ள வழக்குகளின் முழுமையான விவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், நொளம்பூர் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து தொடரப்பட்ட வழக்கின் முந்தைய விசாரணையின் போது, இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யாததற்கான காரணங்களை விளக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஜுன் 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி காவல் ஆணையர் அருண் இன்று நீதிபதி வேல்முருகன் அமர்வின் முன் நேரில் ஆஜரானார். இதையடுத்து, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் மக்களுக்கு எதுவும் சென்றடைவதில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜுன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன என்பது குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.