எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகம் என்பவர் தலைமறைவாகியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்தாண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவி அளித்த புகாரை அடுத்து, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஞானசேகரனை டிசம்பர் 25ஆம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த சென்னை அல்லி குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம், திமுக நிர்வாகி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு குற்றவாளி என அறிவித்தார். மேலும் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். அதேநேரத்தில், 30 ஆண்டுகள் வரை எவ்வித தண்டனை குறைப்பும் வழங்கக்கூடாது என்றும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆதரவாக இருந்ததாக திமுக 170 வது வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகம் மீது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இதன் எதிரொலியாக காவல்துறையினர் தன்னை விசாரிப்பார்கள் என்ற அச்சத்தில் கோட்டூர் சண்முகம் தலைமறைவாகி கேரளாவில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.