குளு... குளு...வெண்பனி போல உதகை

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர்ந்து உறைபனி பொழிவால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இந்த காலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து, உறை பனி பொழிவும் கடுமையாக இருக்கும். அந்த வகையில், நீலகிரியில் இந்தாண்டு தொடர் மழை காரணமாக பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. இதனால் உதகையில் பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது. 

குறிப்பாக,  தாவரவியல் பூங்கா, காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகள், புல்வெளிகள், புற்கள், மரங்கள் உள்ளிட்டவை மீது உறைபனி படர்ந்துள்ளது.

உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் உறைபனியால் புல்வெளிகள், வெள்ளை நிற கம்பளம் போர்த்தியதுபோல் ரம்மியமாக காட்சி அளித்தன. 

இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 1 புள்ளி 3 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. இதனால் உதகை மினி காஷ்மீர் போல் காட்சி அளித்தது. கடும் உறைப்பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறை பனி சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகனங்களில் பெட்ரோல், டீசல் உறைவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

உறைபனியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதால் விவசாயிகள், தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து உறைபனியால் கடும் குளிர் நிலவுவதால் விடிந்த பிறகும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குளிரை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி வெப்பத்தை ஏற்படுத்தி கொண்டனர். மேலும், உறை பனி பொழிவால் சளி, இருமல் மற்றும் கை கால்களில் வெடிப்பு போன்றவை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Night
Day