கிளாம்பாக்கம் பரிதாபங்கள்... என்று தீரும் இந்த தீராத துயரம்...

எழுத்தின் அளவு: அ+ அ-


விளம்பர திமுக ஆட்சியில் மக்களின் துயரங்களில் பெரும் துயரமாக மாறி இருக்கிறது சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம். வெளியூர்களுக்கு செல்லவும், ஊரில் இருந்து வந்தவர்கள் வீடுகளுக்கு செல்லவும் போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாகியுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனைய பரிதாபதங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

பாக்க மட்டும் பந்தாவாக இருக்கும் இதுதான் கிளாம்பாக்கம் பேருந்து முனையம். வெளித்தோற்றத்தில் பகட்டாக காட்சி அளிக்கும் பேருந்து நிலையத்தில், முக்கிய தேவை என்னவோ அதுமட்டும் ரொம்பவே மிஸ்ஸிங். அதாவது போதிய பேருந்துகள் இல்லை என்பது பெருங்குறையாக நீடித்து வருகிறது. நிறைகளை விட குறைகளை அதிகமாகக் கொண்டுள்ள இந்த பேருந்து முனையம் கடந்த சில நாட்களாக கடும் விமர்சனத்திற்கும் மக்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி இருக்கிறது.  

சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கி வந்தன. பேருந்துகள் வந்து செல்வதால் நகரின் மையப் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், விழாக் காலங்களில் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மனதில் வைத்து, கிளாம்பாக்கத்தில் புதிதாக ஒரு பேருந்து முனையம் உருவாக்கப்பட்டது. 

வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் 394 கோடி ரூபாய் செலவில் இந்த பேருந்து முனையம் உள்ளது. கடந்த டிசம்பரில் பேருந்து முனையத்தை திறந்து வைத்த விளம்பர திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், பேருந்து நிலையத்துக்கு தனது தந்தையின் பெயரை வைத்து அழகு பார்த்தார். 

இதை எல்லாம் செய்தவர் அங்கு மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதனால் பேருந்து முனையம் துவங்கப்பட்டதில் இருந்தே பிரச்னைதான். இரவு நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை, முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளே அதிகளவு இயக்கப்படுகிறது என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

அண்மையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டிய தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கிளம்பி கிளாம்பாக்கம் வந்த பயணிகளுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. வெள்ளிக் கிழமை இரவு 9 மணிக்கு மேல், திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி,  திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் குடும்பத்தினருடன் மற்றும் குழந்தைகளுடன் காத்திருந்தனர். கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு மக்கள் இங்கும் அங்கும் அல்லாடினர்.

இருந்த ஒரு சில பேருந்துகளிலும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். பேருந்துகளின் ஜன்னல் வழியாக ஏறிக் குதித்து உள்ளே இடம் பிடித்தனர். பேருந்து முனையத்தில் இருந்த பேருந்துகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக  நின்று கொண்டிருந்த பயணிகள் பின்னர் இறக்கி விடப்பட்டனர். இவ்வாறு தவித்த பயணிகளிடம் அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளித்தால் அவர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள், நள்ளிரவு 1 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பிக்க, போலீசாருக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதே நிலை அடுத்தடுத்த நாட்களும் நீடித்ததே தவிர பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்தபோது, போக்குவரத்து நெரிசலைத் தவிர வேறு பிரச்னைகளை மக்கள் சந்திக்கவில்லை. ஆனால், கிளாம்பாக்கத்துக்கு பேருந்து முனையம் வந்த பிறகு, போதிய பேருந்துகள் இயக்கப்பட வில்லை என்பதை விட, கிளாம்பாக்கம்  செல்வதே மக்களுக்கு பெரும் போராட்டமாக மாறிப் போனது. 

போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதை மாலை முதல் இரவு 10 மணி வரையிலும், பின்னர் அதிகாலை 4 மணியில் இருந்து 7 மணி வரையிலும் அங்கு பயணிகள் தவிக்கும் காட்சியை சிறிதுநேரம் கவனித்தாலே விளங்கிவிடும். மாநகரப் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருந்து விரைவுப் பேருந்துகள் செல்லும் இடத்துக்கு முதலில் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. அது படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது மூடு விழா நடத்தப்பட்டு விட்டது. இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள். வீண் தம்பட்டம் அடிக்கும் இந்த அரசு, மக்கள் பிரச்னைகளையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. 

Night
Day