எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு.எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

திரு. எல்.கே. அத்வானி, துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் - பா.ஜ.கவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, திரு. எல்.கே.அத்வானி தனது 14-வது வயதிலேயே பொது சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவர் என்றும் இந்திய தேசத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு திரு. எல்.கே. அத்வானிக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

புரட்சித்தலைவி அம்மா மீது திரு. எல்.கே.அத்வானி மிகுந்த அன்பையும், மாறாப் பற்றினையும் கொண்டிருந்ததை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அதேபோன்று, புரட்சித்தலைவி அம்மாவும் திரு. எல்.கே.அத்வானி மீது அளவு கடந்த நட்பினை கொண்டிருந்ததாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற 'துக்ளக்' தமிழ் வார இதழின் 42-வது ஆண்டு விழாவில் திரு. எல்.கே.அத்வானி, "புரட்சித்தலைவி அம்மாவிடம் ஒரு இயற்கையான கூட்டாளியை நாங்கள் காண்கிறோம்," என்று பேசியதை இந்நேரத்தில் எண்ணிப்பார்ப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

மேலும், மதுரை திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டியில் திரு. எல்.கே.அத்வானி ரத யாத்திரை சென்ற பாதையில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையிலான அன்றைய தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வெடிகுண்டை உடனடியாக அகற்றி, பெரும் சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாகவும், இதற்காக புரட்சித்தலைவி அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திரு. எல்.கே.அத்வானி நன்றி தெரிவித்ததை எண்ணிப்பார்ப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் மீண்டும் வெற்றி பெற்றதற்காக, திரு. எல்.கே.அத்வானி, புரட்சித்தலைவி அம்மாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததையும் இந்நேரத்தில் மகிழ்ச்சியோடு எண்ணிப் பார்ப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

மேலும், திரு. எல்.கே.அத்வானி போயஸ் கார்டன் இல்லத்தில் புரட்சித்தலைவி அம்மாவை நேரில் சந்தித்ததையும், அவர்களுக்கு விருந்து அளித்து உபசரித்ததையும் இந்நேரத்தில் எண்ணி பெருமிதம் அடைவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் திரு.எல்.கே.அத்வானி நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், மகிழ்ச்சியோடும், நூறாண்டுகளை கடந்தும், பெருவாழ்வு வாழ வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day