பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்ய காவல்துறையினர் திட்டம்? : சென்னை டிபிஐ வளாகத்தில் வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு காவல்துறையினர் குவிப்பு - தயார் நிலையில் காலிப் பேருந்துகள்
Oct 4 2023 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்ய ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 2013 ஒருங்கிணைந்த டெட் நலசங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல், வெயில், மழை என பார்க்காமல் ஏறத்தாழ 10 நாட்களாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், போராடும் ஆசிரியர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று டிபிஐ வளாகத்தில் வழக்கத்தை விட அதிக அளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராடும் ஆசிரியர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக அரசு பேருந்துகள் 3 இந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் தங்களை கைது செய்தாலும் தங்களுடைய போராட்டம் தொடரும் என பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தெரிவித்தனர். எதிர்க்கட்சியில் இருந்தபோது திமுக தங்களுக்கு ஆதரவளித்தது என்றும், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாக தங்களுடைய கோரிக்கைகளுக்கு திமுக அரசு செவிசாய்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழ்நாடு அரசு மும்முரம் காட்டி வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தான் கேட்பதாகவும், சம்பள பிடித்தம் செய்து மிரட்டினாலும் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக அரசின் மௌனத்தால் தங்களது வாழ்க்கை தற்போது இருண்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள ஆசிரியர்கள், தங்களுடைய இந்தப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை ஒருபோதும் ஓய மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.