ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் 263 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது : இதுபோன்ற பேரழிவை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்
Jun 3 2023 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்னை-கோரமண்டல் விரைவு ரயிலில் ஏற்பட்ட விபத்தில் 263 பேர் உயிரிழந்ததற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்னை-கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் இதுவரை 263 நபர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வருவது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மேலும் இரண்டு ரயில்கள் இந்த கோரவிபத்தில் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது - இதில் 900-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வருவது மேலும் அதிர்ச்சி அளிப்பதாகவும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு பேரழிவை யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாது என குறிப்பிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, இந்த கோர விபத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை உடனே மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை உரிய விசாரணை மேற்கொண்டு கண்டறிய வேண்டும் என மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.