கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் : மதுரை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் தீர்ப்பு
Jun 2 2023 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் இறந்துகிடந்தார். அவரது உடலை மீட்டு உடற்கூராய்வு செய்த நிலையில், இது தற்கொலை அல்ல கொலை என்பது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்த நீதிமன்றம், அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா தாக்கல் செய்த மனுவும் விசாரிக்கப்பட்டது. விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் ஆயுள் தண்டனை தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். இதன்மூலம் கோகுல்ராஜ் கொலையில் தொடர்புடைய யுவராஜ், அருண், ரகு, ரஞ்சித், சந்திரசேகரன், செல்வராஜ், பிரபு, குமார், சதீஷ்குமார், கிரிதர் ஆகியோரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் கோகுல்ராஜின் தாயார் சித்ரா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.