மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 15 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் - தமிழக அரசுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்
Jan 30 2023 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்டா மாவட்ட கடைமடை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் வீணாகாமல் காப்பதற்காக, மேட்டூரிலிருந்து கூடுதலாக 15 நாட்களுக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என, தமிழக அரசை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் உள்ளிட்ட கடைமடை பகுதிகளைச் சேர்ந்த டெல்டா விவசாயிகள், தாங்கள் பயிரிட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் வீணாகிவிடாமல் காப்பதற்காக மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.
டெல்டா விவசாயிகள், மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளை வந்தடைய காலதாமதம் ஆனதாலும், தொடர் மழையின் காரணங்களாலும் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்களை அறுவடை செய்து முடிக்க காலதாமதம் ஏற்பட்டு அதன் பின்னர்தான் தாளடி நெல்லை பயிரிட்டுள்ளனர் - இந்த நெற்பயிர்கள் நன்றாக முற்றி தற்சமயம் பால் கட்டும் பருவமாக இருப்பதால், நெற்பயிர்கள் முழு வளர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராக இன்னும் ஒருமாதக் காலம் ஆகும் என்ற நிலை இருக்கிறது - இந்த சூழ்நிலையில் தமிழக அரசு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டதால், தாளடி பயிர்கள் வீணாகிவிடும் என்று டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு, மேட்டூரிலிருந்து கடந்த 28ம் தேதி அன்று தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டபடியால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தாளடி பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சின்னம்மா, மேட்டூரிலும் 104 அடிகளுக்கு மேல் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால், மேட்டூரிலிருந்து இன்னும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என தெரிவித்துள்ளார்.
விவசாயிகள், ஏற்கெனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டு இருக்கும் சூழலில், தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டதால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என புரட்சித்தாய் சின்னம்மா எச்சரித்துள்ளார். எனவே, பாசன விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள தண்ணீரை, இன்னும் 15 நாட்களுக்கு கூடுதலாக திறந்துவிட வேண்டும் என தமிழக அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.