வேடசந்தூர் அருகே கூடுதல் பானி பூரி தர மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்ட வடமாநில வியாபாரி - தாக்குதலில் ஈடுபட்ட ஒடிஷா மாநில இளைஞர் கைது
Aug 14 2022 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கூடுதல் பானி பூரி தர மறுத்த வடமாநில கடைக்காரரை கத்தியால் ஒருவர் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் சிங் என்பவர், திண்டுக்கல் வேடசந்தூர் ஆத்துமேட்டில் பானிபூரி கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பானி பூரி சாப்பிட்டுவிட்டு, கூடுதலாக ஒரு பானி பூரியை கேட்டுள்ளார். இதற்கு ராகுல்சிங் மறுக்கவே தகராறு ஏற்பட்டு, ராகுல் சிங் ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகுல் சிங்கை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது, காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட காணப்பட்ட ராகுல் சிங், அந்த இளைஞரை விரட்டிச் சென்று கல்லால் தாக்கினார். இதையடுத்து, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
காயமடைந்த ராகுல் சிங்கை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நரேஷ் குமார் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோர் மீட்டு, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தப்பிய நபர் ஒடிசாவை சேர்ந்த 26 வயதாகும் சுஜித்குமார் என்பதும், மினுக்கம்பட்டியில் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. வேடசந்தூர் குடகனாறு பாலத்தின் அடியில் பதுங்கியிருந்த சுஜித்குமாரை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.