அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பேனர்கள் கிழிப்பு - ஒற்றைத் தலைமை கோரி எடப்பாடி ஆதரவாளர்கள் மீண்டும் கோஷம்
Jun 27 2022 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டன.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டியினரிடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. கடந்த 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக மோதல் அதிகரித்து வரும் நிலையில், கட்சி நாளிதழில் இடம்பெற்றிருந்த ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பெயர் எதுவும் இன்றி தலைமை கழக செயலாளர் சார்பில் நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை வேண்டுமென தொடர் முழுக்கங்களை எழுப்பினர். அவரின் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் உள்ள ஓபிஎஸ் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். கூட்டத்தில் ஓபிஎஸ்சுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.
தலைமைக் கழக நிர்வாகிகள் 64 பேரில் 55 பேர் இக்கூட்டத்திற்கு வந்ததாக கூறப்படும் நிலையில், திட்டமிட்டபடி வரும் 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.