பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி
Mar 8 2021 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேருக்கு நேர் மோத தயாராக இருப்பதாக மேற்குவங்க முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி பா.ஜ.கவுக்கு சாவல் விடுத்துள்ளார். பெட்ரோல்-டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், பாஜகவினர் வாக்குக்கு பணம் கொடுத்தால், அதை வாங்கிக்கொண்டு திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கொல்கத்தாவில் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரத்தில், பெட்ரோல்-டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, மேற்குவங்க முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி, சிலிகுரியில் பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டார். ஆளுயர சிலிண்டர் பொம்மையுடனும், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடனும் பேரணியாக சென்றார். அப்போது, மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து சிலிகுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் திரு.மோடி கூறினார்-ஆனால் பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டார். தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோத தாங்கள் தயாராக இருப்பதாகவும், பாஜகவினர் வாக்குக்கு பணம் கொடுத்தால், அதை வாங்கிக்கொண்டு திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என குறிப்பிட்டார். நாட்டில் தற்போது உள்ள திரு.அமித்ஷா மற்றும் திரு.மோடியின் சிண்டிகேட் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.