எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் அரசு காப்பகத்தில் காவலாளியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சிட்லப்பாக்கம் அடுத்த ஜட்ஜ் காலனியில் சமூக நலத்துறை சார்பில் மகளிர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 183 பள்ளி மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவி கடந்த 5 நாட்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். தந்தையை இழந்ததால் ஏற்பட்ட வறுமை காரணமாக அவருடைய தாயார், இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை அந்த சிறுமியை அதிகாலை 4 மணி அளவில் காப்பக காவலாளி மேத்யூ என்பவர் தூக்கிச் சென்று கால்களை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. கால்கள் உடைந்து உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த சிறுமி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் உடல் நலம் தேறி வருகிறது. காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு காலில் தையல்கள் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிக்கு இன்று மருத்துவர்கள் கவுன்சிலிங் அளிக்கின்றனர்.