சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.
 
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கரூரில் முகாமிட்டு, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.

41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஆதாரங்களை சேகரித்தனர். இதன் பிறகு வழக்கின் விசாரணைக்காக தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.  

Night
Day