தி.மு.க.வினர் அராஜகம் - புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த ஆதி திராவிட சிறுமி அரக்‍கத்தனமாக அடித்து, துன்புறுத்தப்பட்டு கடும் சித்ரவதைக்‍கு ஆளாக்‍கப்பட்டிருப்பது குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிட சிறுமிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், சிறுமிக்கு அநீதி இழைத்த திமுகவினர் மீது, திமுக விளம்பர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி உள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, எக்‍ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த, ஆதிதிராவிட சிறுமியை மனிதாபிமானமற்ற வகையில் அரக்கத்தனமாக அடித்து கடும் சித்ரவதை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். திமுகவினர், ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கும் மமதையில் இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநறுங்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், தொடர்ந்து மருத்துவ கல்வி பயில வேண்டும் என முடிவு செய்து, உயர் படிப்பிற்கு ஆகும் செலவை சமாளிப்பதற்காக வீட்டு வேலைக்கு சென்றுள்ளார் அதாவது சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு மாணவி வேலைக்கு சென்றதாக தெரிய வருகிறது - குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்ற அந்த சிறுமியை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவர் மனைவி மார்லீனோ ஆன் ஆகியோர் அடித்து துன்புறுத்தியிருப்பது மன்னிக்கமுடியாதது - இது தொடர்பாக மாணவி தமிழக காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை தவறு இழைத்தவர்களை கைது செய்யாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது - தவறு இழைத்தவர்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தயக்கம் காட்டுகிறதா? என்று தெரியவில்லை என, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா, இதுபோன்று தங்கள் சொந்தக்‍ கட்சியினர் யாரேனும் தவறு இழைத்திருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்‍கை எடுக்‍க தயங்கமாட்டார் -ஆனால் இன்றோ தமிழக காவல்துறையை கையில் வைத்து இருக்‍கும் முதல்வருக்‍கு தங்கள் கட்சியினர் செய்யும் அராஜக செயல்களை ஏன் தடுக்‍க முடியவில்லை ? ஆளும் கட்சியினரே இவ்வாறு அராஜகத்திலும், அத்துமீறலிலும் ஈடுபட்டால் தமிழகத்தில் ஏழை, எளிய, சாமானிய மக்‍களுக்‍கு பாதுகாப்பு எங்கே இருக்‍கும்? என்று புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார். 

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில்தான், தமிழக மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்தனர் - பெண்களுக்கும் ஒரு மரியாதை இருந்தது - ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது - அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்செயல்கள், அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன - ஆனால் தமிழக மக்களை பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் தேர்தலை மட்டும் மனதில் வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் திமுகவினருக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் தமிழக மக்‍களை துன்புறுத்திக்‍ கொண்டிருக்‍கும் திமுகவினருக்‍கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்‍கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் திமுகவினர் செய்யும் அராஜக செயல்களை கண்டும் காணாமல் இருப்பதை விட்டுவிட்டு, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - திமுக சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆதிதிராவிட சிறுமிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் - சிறுமிக்கு அநீதி இழைத்த திமுகவினர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day