டிச.5 புரட்சித்தலைவி அம்மா நினைவு நாள் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலரஞ்சலி செலுத்துகிறார்

எழுத்தின் அளவு: அ+ அ-

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் 9ம் ஆண்டு நினைவு நாளான வரும் 5ம் தேதியன்று, சென்னை மெரினாவில் உள்ள அம்மாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க உள்ளார்.

இதுதொடர்பாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறை கொண்டு தன்னலமின்றி பொதுநலத்தோடு, "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற மக்கள் தலைவி, நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் எந்நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் வகுத்துக் கொடுத்த பாதையில் அடிபிறழாமல், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடைப்பிடித்து வந்த ஒப்பற்ற கொள்கைகளைப் பின்பற்றி, அதே வழியில் நாமும் தொடர்ந்து பயணித்திட, அவர்களது நினைவு நாளான வரும் 5ம் தேதி வெள்ளிக் கிழமையன்று காலை 11 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், கழகத் தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்க இருக்கிறார்கள் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புனித நிகழ்வில், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவியின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும், புரட்சித்தலைவி அம்மா அவர்களை தங்கள் முன்மாதிரியாக மனதில் வைத்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கப் பெண்களும், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Night
Day