கல்லூரி மாணவர்கள் அட்ராசிட்டியால் போக்குவரத்து பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மாநகரப் பேருந்து மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் ஏறி அட்ராசிட்டியில் ஈடுபட்டதால் பொதுமக்‍கள் அதிர்ச்சியடைந்தனர். ரூட்டு தல விவகாரத்தில் ஈடுபட்ட நந்தனம் அரசு கலை கல்லூரி முன்னாள் கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எருமை வெட்டி பாளையத்தில் இருந்து சென்னை பிராட்வே நோக்கி மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சென்னை வியாசர்பாடி பகுதிக்கு வந்தபோது பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் மேம்பாலம் மீது சென்றபோது பேருந்து மேற்கூரை மேலே ஆபத்தான முறையில் ஏறி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதனிடையே, இன்று தொடங்கிய நந்தனம் கலை கல்லூரிக்குள் முன்னாள் மாணவர்கள் நுழைந்து தகராறு செய்ய முயன்றதாக தகவல் கிடைத்ததால் காவல்துறையினர் தேனாம்பேட்டை பேருந்து நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது நந்தனம் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 8 பேர், பள்ளி மாணவன் உட்பட 9 பேர் அரசு பேருந்தில் ரூட்டு தல விவகாரத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அடைத்து வைத்தனர். பேருந்தில் சென்ற மற்ற கல்லூரி மாணவர்களின் ஐடி கார்டை சோதித்து தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி இன்று திறக்கப்பட்ட நிலையில் ஆவடி ரூட் என்கிற பேனரோடு 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது அவர்களுக்‍கு அனுமதி மறுக்‍கப்பட்டது. பருவத் தேர்வுகள் முடிந்தப்பின் பச்சையப்பன் கல்லூரி மீண்டும் திறக்‍கப்பட்டதால், மாணவர்களின் அராஜகத்தை தவிர்க்‍கும் வகையில், காவல்துறையினர் முன்கூட்டியே பச்சையப்பன் கல்லூரி, அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மேற்கொண்டனர். மேலும், அடையாள அட்டை உள்ள மாணவர்களையே கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து, மற்றொரு குழுவாக பேருந்தில் வந்து தாளம் போட்டு முழக்‍கமிட்ட மாணவர்களுக்‍கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.


varient
Night
Day