2-வது நாளாக ராமதாஸ், அன்புமணி ஆலோசனை

எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக-வில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளநிலையில் 2வது நாளாக இன்று 10 மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வரும்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிர்வாகிகளை ராமதாசும் சந்தித்து வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 29ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி குறித்து பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக சோழிங்கநல்லூரில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்த பிறகு பேசிய அன்புமணி, பாமக தனி நபருக்கு சொந்தமான கட்சி இல்லை என்றும், தலைவரான தமக்கே உரிமை உள்ளதாகவும் கூறி ராமதாசுக்கு பதில் தந்தார். 

மேலும், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவரான தமக்கு மட்டுமே நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்வும் அதிகாரம் இருப்பதாகவும், வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ராமதாசின் நிர்வாகிகள் நீக்கத்திற்கு அன்புமணி பதிலடி தந்தார். தனது ஆதரவாளர்களை தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்ட நிலையில், நீக்கப்பட்டவர்களை கட்சி பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிக்கை வெளியிட்டார். 

இவ்வாறு இருவருக்கும் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளநிலையில் தனது பலத்தை நிரூபிப்பதற்காக மாவட்ட நிர்வாகிகளுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் அன்புமணி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

அதேவேளையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகிகளை ராமதாசும் சந்தித்து ஆலோசித்து வருகிறார். மேலும் தனது ஆடிட்டரையும் வரவழைத்து ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Night
Day