மூதாட்டிக்கு 15 கத்திக் குத்து... இளைஞரின் வெறிச்செயல்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் ஓய்வு பெற்ற பெண் ஆசிரியரை 15 முறை சரமாரியாக கத்தியால் குத்திய 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இளைஞர் வெறிச்செயலில் ஈடுபட்டதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

மயிலாடுதுறை அடுத்த மதுரா நகரில் 60 வயதான ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர் நிர்மலாதேவி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் எதிரே 25 வயதான பிரேம் என்ற இளைஞரும் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்று காலை நிர்மலா தேவி வீட்டு வாசலில் வழக்கம்போல் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, பிரேம் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து நிர்மலா தேவியை தாக்கியுள்ளார்.
 
நிர்மலாதேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுக்க முயற்சித்தவர்கள் கத்தியுடன் இருந்த பிரேம் மீது அருகில் கிடந்த கற்கள் மற்றும் கட்டையைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், கோபம் தலைக்கேறிய பிரேம், நிர்மலா தேவியின் உடலில் 15 இடங்களுக்கும் மேல் சரமாரியாக கத்தியால் குத்தி வெறிச் செயலில் ஈடுபட்டார். மேலும், தடுக்க வந்த நிர்மலாதேவியின் கணவர் சேது மாதவனையும் கத்தியால் குத்தினார்.


சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, படுகாயங்களுடன் கிடந்த நிர்மலாதேவி மற்றும் அவரது கணவர் ஆகியோரை மீட்டு மயிலாடுதுறை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், நிர்மலாதேவியின் உடல்நிலை மோசமடைந்ததால் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 


இதனிடையே கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் பிரேமை போலீசார் கைது செய்துள்ளனர். பிரேம் மற்றும் ஆசிரியை நிர்மலா தேவி குடும்பத்திற்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிரச்னைகளே தற்போது கத்திக்குத்து வரை வந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

60 வயது பெண்ணை, 25 வயது இளைஞர் ஒருவர் 15 முறை கத்தியால் குத்தி வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day