கோவிலுக்குள் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோயிலில் இரவு நேர காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் அருகே இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயிலில் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகிய இருவரும் கோயில் காவலாளியாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் நேற்று இரவு கோயில் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோயிலின் பகல் நேர காவலாளியான மாடசாமி இன்று காலை வேலைக்கு வந்தபோது கோயில் பிரதான கதவின் சிறிய கதவு திறந்திருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் உண்டியல் சேதப்படுத்தப்பட்டு, இரவு நேர காவலாளிகள் பேச்சி முத்து, சங்கர பாண்டியன் ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மாடசாமி கொடுத்த தகவலின் பேரில் கோயில் அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்டியல் உடைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது உறுதி ஆனது. இதனையடுத்து போலீசார் இரு காவலாளிகளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உயிரிழந்த காவலாளிகளின் உறவினர்கள் கோவில் முன்பு திரண்டு, குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்கள் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொலையாளிகளை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day