திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்க்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து விழாவின் 10வது நாளான இன்று அதிகாலை சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியின் கருவரை முன்புள்ள பிரதோஷச நந்தி சிலை அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீப திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர். 

பிரதோஷ நந்தி சிலை அருகில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்கை, சிவாச்சாரியார் கையில் ஏந்தியவாறு திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் வைகுந்த வாயில் வழியாக உண்ணாமுலை அம்மன் சன்னதியில் உள்ள உண்ணாமுலை அம்மனுக்கு ஆராதனை காட்டப்பட்டது, அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் உள்ள விநாயகர், முருகன் ஆகியோருக்கு ஆராதனை காட்டப்பட்டு மீண்டும் திருக்கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆராதனை காட்டப்பட்டது, பரணி தீபத்தை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Night
Day