முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு ஆகியும், மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகம் - டிடிவி தினகரன் கடும் கண்டனம்
Jun 28 2022 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் திரு. ஸ்டாலின், பதவியேற்று ஓராண்டு ஆகியும், மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகமாகும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்டப் போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், அவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றித்தர, தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்து, 'ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்று வாக்குறுதி கொடுத்த திரு. ஸ்டாலின், முதலமைச்சராகி ஓராண்டு ஆன பின்னும், அதனை நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகமாகும் என திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், ஏழை, எளிய மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள் - அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மனசாட்சியோடு நிறைவேற்றாமல் இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? என திரு. டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.