பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
Jan 31 2023 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது.
2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். அவரது உரையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுவார்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி வரையும் அதன் பின்னர் மார்ச் 12-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை என இரு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 27 அமர்வுகள் நடக்க உள்ள இந்த தொடரில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் 36 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.
ஆனால், அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம், பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படம், சாதி வாரி கணக்கெடுப்பு, பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா ஆகியவை குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இது எதிரொலித்தது. இதனால் இந்த கூட்டத் தொடரில் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.